Thursday, June 4, 2009

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளிடையே உறவில் புதிய ஆரம்பம் வேண்டும்: அதிபர் ஒபாமா


எகிப்தில் உரையாற்றிய அதிபர் , ''உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அதிபர் ஒபாமாவின் உரைக்கு பெருத்த கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்தது.

கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய இந்த உரையில், அமெரிக்காவும், இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, நீதி, முன்னேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பொது அடிப்படைகளை அவை பகிர்ந்துகொள்பவை என்று ஒபாமா கூறியிருக்கிறார்.

முஸ்லிம்கள் பற்றிய மோசமான விம்பத்துக்கு எதிராக தான் போராடுவேன் என்று உறுதி கூறிய ஒபாமா அவர்கள், அதேவிடயத்தை அமெரிக்கா பற்றிய கருதுகோள் குறித்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு நாட்டின் மீது மற்றுமொரு நாட்டினால், எந்த வகையான அரசாங்க முறைமையும் திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


அதிபர் ஒபாமாவின் உரை குறித்து இஸ்ரேல் எச்சரிக்கையுடன் பதிலுரைத்துள்ளது.


பாலத்தீன பிராந்தியங்களில் இருந்து இந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இது ஒரு நல்ல ஆரம்பம் என்று பாலத்தீன நிர்வாகம் இந்த உரையை வெகுவாக வரவேற்றுள்ளது. தற்போதுள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும், இது ஒரு வெளிப்படையான மாற்றத்தைக் காண்பிக்கிறது என்று ஹமாஸ் கூறியுள்ளது.


இந்த உரை ஒரு வரலாறு என்றும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ள இராக்கிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், ஆனால் வார்த்தைகளில் கூறியவை நடவடிக்கைகளில் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.