
அடுத்தபடியாக ஸ்குரு, நட்டு, போல்டு, குண்டுசி, ஆணி போன்ற வற்றை போட்டால் இன்னும் கொஞ்சம் வியாபாரம் ஆகலாம்.
எனக்கு சுன்னத் பண்ணும் போது 10 வயதாகி விட்டது. என்னுடன் சேர்த்து என் தம்பி மற்றும் பெரியம்மா பசங்க என்று மொத்தம் 4 பேர்களுக்கு செய்தார்கள். வயதில் மூத்தவன் என்கிற அடிப்படையில் எனக்கு தான் முதலில் நறுக் செய்திட வேண்டும். ஆகவே பயம் எனக்கு கொஞ்சம் ஓவராக இருந்தது. இப்போதெல்லாம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு 10 நிமிடத்தில் 4 பேருக்கு டாக்டர்களே செய்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு நறுக் செய்திட்டவரோ நாசுவன் என்று அழைக்கப் படக் கூடிய நாவித மருத்துவர். ஆகையால் மயக்க மருந்து ஏதுமின்றி உரலின் நடுமைய மாக உட்கார வைத்து விட்டு, வயதுக்கு வந்த ஆண் மக்கள் சூழ ஒரு சிறிய கத்திரி மற்றும் கத்தியை மட்டும் வைத்து காரியத்தை முடித்திருவார். இவரிடம் தான் நான் பிறந்தில் இருந்து 15 வருடமாக முடியும் வெட்டிக் கொண்டேன். சில நேரங்களில் கடனுக்கு கூட. இவர் கிட்ட போனாலே சுருட்டு வாசம் ஆளை தூக்கும். இவர் முடி திருத்தும் கடை பக்கம் போனல் சில சமயம் மாப்ளே. இங்கே வாடா, அப்பாவிற்கு (தாத்தாவிற்கு) மயில் மார்க் சுருட்டு வாங்கியாடான்னு சொல்வாரு. நானும் தட்டாமல் வாங்கியும் கொடுத்திருக்கேன்.
எனக்கு 10 நாட்களுக்கு முன்னரே எனது கெழுதகை நண்பன் ஹைதர் அலி கத்னா வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவர் சீனியர் ஆகிவிட்டதால வெட்கத்தை விட்டு போய் ரெம்ப வலிக்குமாடான்னு கேட்டேன். ஆமாம், உயிரே போயிடும்னு சொன்னான். சரியாப் போச்சு. சும்மாவே பயமா இருந்து எனக்கு எங்க உசுரு போயிடுமோன்னு ரெம்பவே பயம். பின்னே யாருக்கு தான் உசுரு மேல ஆசை இருக்காது. பின்னாடி வாப்பாட்ட போயி ஒரே ஒப்பாரி. ஊகூம் மனுசன் அசரவே இல்லை. பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சு, ஊரை எல்லாம் கூப்பிட்டாச்சு. கழுதை வயசாகுது இப்ப பண்ணல்லைன்னா வேற எப்ப பண்றது. இங்க பாரு உன் தம்பி எவ்வளவு தைரியமாக இருக்கான். அவன் மூத்திரத்தை வாங்கி குடிடான்னு வேற சொல்லிட்டாரு. நம்மளை கொல்லுறதுக்கு ஏதொ சதி நடக்குதுன்னு நெனைப்பில்ல நான் பாட்டுக்கு ஏதாவது செய்து இதை உடனே தடுத்தாகனும்னு ராத்திரி பூராவும் மூளையை போட்டு கசக்கி பார்த்தாலும் ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை. ராத்திரி கனவுள்ள நாசுவரு கத்திரி, கத்தியோட வந்து மிரட்டி விட்டு போனது தான் மிச்சம்.
மறுநாள் என் தம்பிட்ட ஏன்டா உனக்கு பயமாக இல்லையாடான்னு கேட்டேன். பய நம்மள்ள விட புத்திசாலி. அதான் உனக்கு தான்னே முதல்ல பண்ணுறாங்கன்னு சொல்ல நாசுவரை விட இவன் தான் எனக்கு பெரிய எதிரியாக தெரிந்தான்.
கடைசியில்ல கத்னா செய்ய வேண்டிய நாளும் வந்தது. ஊரையே கூப்பிட்டு கறி சோறு போட்டு கத்னா செய்வது என்றால் சும்மாவா காலையிலேயெ இரண்டு கிடாவை வெட்டி கறி குழும்பின் வாசனை ஊரையெ தூக்கியது. முதல் சாப்பாடு சுன்னத் கல்யாண மாப்பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று ஏதெனும் எழுதப் படாத சட்டம் இருக்கும் போல. எங்கள் நான்கு பெயர்களுக்கு தான் முதல் சாப்பாடு வைத்தார்கள். ஆனால் ஒரு பயலுக்கும் உள்ள இறங்கள.
அப்போ தான் நம்ம வில்லன் வந்தாரு. எனக்கு தான் இவரை பொறந்ததில் இருந்து தெரியுமே. இவரோட மனைவி தான் எனக்கு பிரசவம் பார்த்தவங்களாம். இவ்வளவு ஏன் எங்க குடும்பத்துள்ள பாதி பெயருக்க இவங்க மனைவி தான் பிரசவம் பார்த்தாகவும் தெரிந்து கொண்டேன். இதுள்ள இன்னொரு வரலாற்று பூர்வமான தகவலும் எனக்கு கிடைத்தது. அது என்னவென்றால் இவரு தான் எனக்கு முதன் முதல மொட்டை போட்ட மவராசன் என்கிற சேதி. இது மட்டுமில்லாமல் என்னோட வாப்பா, மாமா, சின்னவாப்பா என்று ஊருள்ள உள்ள ஆண் மகவுகள் பாதி பெயர்களுக்கு இவர் தான் நறுக் செய்து விட்டவர். இந்த அறிமுகப் படலம் முடிந்ததும். நாவிதர் என் தம்பியை பார்த்து மாப்ளே... உனக்கு தான் முதல்ல வெட்டப் போறென் என்றார். ஊம் காக்கா (அண்ணன்) இருக்கானுள்ள என்று என்னோட வாப்பாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான்.
நேரம் தேய தேய எனக்குள் பயமும் அதிகமாகியிருச்சு. எங்கள் நான்கு பேரையும் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போயி பள்ளிவாசலில் துஆ ஓதினார்கள். பின்னர் நான் அணிந்திருந்த புது துணியை கழற்றி விட்டு ஒரு வெள்ளை துண்டை சுற்றி உரலில் நடு மையமாக உட்கார வைக்கவும் அழுகை பீறிட்டு வந்தது. பயத்தில் கையையும், காலையும் உதற ஆரம்பித்து விட்டேன். என் கையையும் காலையும் இறுக்கமாக நான்கு பேர்கள் பிடித்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மயக்கமாகி விட்டேன். பின்னர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எழுந்து பார்த்தால் எல்லாம் முடிந்து விட்டது.
நாங்கள் நான்கு பேரும் வரிசையாக படுக்க வைக்கப்பட்டு தொட்டி மாதிரி வெள்ளைத் துணியில் தொட்டில் போன்று கட்டி நறுக் செய்யப் பட்ட இடத்தில் எதுவும் பட்டு விடக் கூடாது என்கிற முன்னேச்சரிக்கை ஏற்பாடாக படற விட்டிருந்தார்கள். என் தம்பி மட்டும் இன்னும் அழுது கொண்டிருந்தான். உம்மா தான் அவளை எல்லாம் முடிந்திருச்சு காலையில்ல எல்லாம் சரியாகிடும்னு அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்.நறுக் பண்ணிய இடத்தை சுற்றி வெள்ளை துணியால் மருந்திட்டு கட்டியிருந்தார்கள். சிறிறு மஞ்சள் நிறமும். சிகப்பு சிறமுமாக அவ்விடம் காட்சி தந்தது. முதல் நாள் மட்டும் சிறுநீர் கழிக்க சற்று சிறிது கஷ்டமாக இருந்தது. மறுநாள் சரியாகி விட்டது.
நறுக் செய்து ஏழு நாட்கள் ஆகி விட்டது. நறுக் செய்து சரியாக ஏழாம் நாளன்று கட்டை பிரிப்பார்கள். அதற்கு முந்தைய இரவே கட்டை சுலபமாக பிரிப்பதற்காக தேங்காய் எண்ணையில் காயத்தை நன்றாக ஊற வைத்திடுவார்கள். எனது கெழுதகை நண்பன் ஹைதர் அலி வந்து அடுத்து குண்டை தூக்கி போட்டான். மச்சான்அன்னைக்கு சொன்னேன்னுள்ளடா உயிரே போயிடும்னு அது இன்னைக்கு தான். இன்னைக்கு தான் கட்டை பிரிப்பாங்கள் என்று பீதியை கிளப்பி விட்டு போனான். ஏழு நாளைக்கு பின்னாடி பயம் அடி வயித்தை புரட்டியது. குளிப்பாட்டுவதற்கு நாவிதரும் வர குளிப்பாட்டும் படலம் ஆரம்பமானது. எனக்கு குளிக்கும் போதெ கட்டு அவிழந்து போனது. ஆனால் என் தம்பிக்கு தான் கட்டை பிரிப்பதற்கு நாவிதர் பெரும் பாடு பட்டு விட்டார். அந்த ஏழு நாட்களுக்கு பின்னர் நாங்கள் நால்வரும் நிர்வாண நிலையில் இருந்து கைலிக்கு மாறினோம். கைலி நறுக் செய்யப் பட்ட இடத்தில் படும் போடிதல்லாம் கூசும். அதனால ஒரு வாரத்திற்கு கைலியை தூக்கி பிடித்த படியே நடக்க வேண்டும்.
சரித்திரத்தில் மறைக்கப்பட்ட இந்த சம்பவங்கள் நடந்து சுமார் 12 வருடங்கள் ஆகி விட்டது. இன்னைக்கு யாரும் நாவிதரை கூப்பிட்டு நறுக் செய்வதில்லை. நேராக டாக்டரிடம் போய் விடுகிறார்கள். அன்று எனக்கு நறுக் செய்தவர் இன்று ரிட்டையர்டு ஆகி விட்டார் என்று கூற முடியாது. ஆனால் அவர் வயதாகி போனதால்ல யாருக்கும் சுன்னத் செய்வதில்லை என்றும் கூறிக் கொள்கிறார். ஆனால் மயில் மார்க் சுருட்டை மட்டும் விட்ட பாடில்லை.
-----------