Saturday, May 2, 2009

நானும் லக்கிலுக்கும் (ஒரு பிளாஷ்பேக்)


எனக்கு லக்கிலுக் (லயன் காமிக்ஸ் மூலம்) அறிமுகம் ஆகும் போது எட்டு வயது. அநேகமாக லக்கிலுக்கின் அனைத்து தமிழ் காமிக்ஸ்யையும் படித்து விட்டேன். எனது மைத்துனர் ஒருவர் (வயது 35) ஒரு பீரோ நிறைய லயன், முத்து, திகில், ஜுனியர் காமிக்ஸ் என்று குவித்து வைத்திருக்கிறார். போனால் போகிறது என்று ஒன்றிரண்டு ராணி காமிக்ஸ் அவற்றுள் அடக்கம். அவர் வெளியில் போகும் போது அவர் எங்கே பீரோவின் சாவியை ஒளித்து வைத்தாலும் அதனை எடுத்து காமிக்ஸை படிப்பதில் ஒரு சுகம்.


டால்டன் பிரதர்ஸ், ஜாலி ஜம்பர் என்று லக்கிலுக்கின் காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களின் பெயரையே பெரும் பாலும் எங்கள் தெரு நாய்க்கு சூட்டி மகிழ்ந்தேன். நான் எழுத்தாளர் ஆனால் லக்கி லுக்கின் பெயரை தான் பயன்படுத்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் ஒருவர் முந்திக் கொண்டார். சரி தொலைகிறது என்றும் விட்டு விட்டேன்.

இன்று சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைப்பது அரிதாகி விட்டது. இருந்தாலும் ஒரு கடையை பழக்கம் பிடித்து விட்டேன். அவரின் தயவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படித்து வருகிறேன். எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று சிவகாசி போய் லயன் காமிக்ஸின் ஆசியரியர் விஜயனைச் சந்தித்து இருக்கிற காமிக்ஸை அனைத்தையும் அள்ளிவிட்டு வர வேண்டும் என்ற ஆசை உண்டு. காமிக்ஸ் படித்த பின்னர் தான் எனக்கு எழுத்தார்வமும், படிப்பார்வமும் அதிகரித்தது. தமிழில் காமிக்ஸ் படித்து படித்து இன்று சென்னைiயில் என்னதான் இங்கிலிஸ் காமிக்ஸ் சுலபமாக கிடைத்தாலும் வாங்கிப் படிக்க மனசு வரவே இல்லை. (பின்னே எல்லாம் காந்தி நோட்டால்ல கேட்கிறான்) இரத்தப்படலம் இப்போது ஒரு தொகுப்பாக வருவதாக அறிகிறேன். இன்னும் கையில் கிடைத்த பாடில்லை.


சுரி லக்கிலுக்கைப் பற்றி எழுதும் நமது பிரபல வலைப்பதிவர் லக்கியைப் பற்றியும் கொஞ்சம் எழுதவில்லை என்றால் எனது வலைபூவிற்கு வந்து விமர்சனம் பதிய மாட்டார்.





நான் சொன்ன வலை பதிவர் சந்திப்பு

அது நான் சென்னை வந்த மூன்று ஆண்டுகளுக்கு நிகழ்ந்தது. அன்று தான் முதலாவது வலைப் பதிவர் சந்திப்பு பால பாரதியின் ஒருங்கிணைப்பில் கிழக்குப் பதிப்பகம் கட்டிடத்தின் எதிரே நடைபெற்றது. பாலாவும் எனது ஊர் காரர் தான். அன்று வலை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிலேயே மிகச் சிறிய வயது பையன் நானாக தான் இருந்தேன். அதே கிழக்குப் பதிப்பகத்தில் இன்று தனது புத்தகங்களை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. லக்கி சமீபத்தில் எழுதிய விளம்பர உலகம் நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் ஒன்று. இன்று விஸ்காம் படிக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இது இது ஒரு வரப்பிரசாதம். வரப்பிரசாதம் என்று நான் கூறியது கொஞ்சம் ஒவர் என்று எல்லாம் யாரும் பின்னுட்டம் இட வேண்டாம். காரணம் என்னவென்றால் விஸ்காம் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு விளம்பர உலகத்தை அறிமுகம் செய்ய தமிழில் உருப்படியாக ஒரு புத்தகமும் கிடையாது. லக்கியின் பணி தொடர வேண்டும்.

லக்கியை பார்த்தால் மரைக்காயர் சொன்னதாக சொல்லுங்கள் அடிக்கடி 13 போக வேண்டாம் என்று.

கலைஞரின் உண்ணாவிரத கலாட்டா (வீடியோ நகைச்சுவை)


பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?



பன்றிக் காய்ச்சல் (Swine Flu) என்பது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சல் மரணத்தையே ஏற்படுத்தும். புளூ வைரஸ் டைப் ஏ (எச்1 என்1) என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் ஏற்படுகிறது. பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் இந்த வைரஸ் தாக்கக்கூடும். இதில் எச்1 என்1, எச்1 என்2, எச்3 என்2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. பன்றிகளிலிருந்து, மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வேகம் குறைவு தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக வேகமாக நோய் பரவும். பன்றி இறைச்சி, உணவு மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை. இந்த நோய் தொற்றியவர்களுக்கு, கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடம்புவலி, சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்றவை இருக்கும். சில நேரங்களில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பாதிக்கப்பட்ட நபர்கள் இருமினாலும், தும்மினாலும் கூட இந்த எச்1 என்1 வைரஸ் வேகமாக பரவி, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு மரணமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

""பன்றிகளுக்கு இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. ஆனால், மனிதர்களுக்கு தடுப்பூசி இல்லை. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு வைரசுக்கு எதிரான மருந்துகள் உள்ளன. நியூரோமினிடேஸ் இன்கிபிடார்ஸ் வகையைச் சேர்ந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனளிக்கும்,'' தேனியைச் சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி, ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு எச் 1 என்1 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ், அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவில் 91 பேர், மெக்சிகோவில் 26 பேர், ஜெர்மனியில் மூன்று பேர், இஸ்ரேலில் இருவர், நியூசிலாந்தில் மூன்று பேர், ஸ்பெயினில் நான்கு பேர், இங்கிலாந்தில் ஐந்து பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் தாக்குதலில் மெக்சிகோவில் ஏழு பேர் இறந்துவிட்டனர்.


பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது. அதில் மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில், பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான ஜீன்கள் ஒருசேர அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை. இந்த புதிய வைரஸ் மனிதர்களிடம் அதிவேகமாக பரவி தாக்கி வருகிறது. மெக்சிகோ சென்று விட்டு ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு இந்நோய் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. மருத்துவ சோதனையில் அவருக்கு நோய் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இந்தியாவில் இதுவரை இந்த பன்றிக் காய்ச்சல் மனிதர்களை தாக்கியதாகவோ, மனிதர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. ஆனால் 2004ம் ஆண்டு டில்லி, மிசோரம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இந்நோய் பரவல் ஏற்பட்டு, கால்நடைத்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், மனிதர்கள் பாதிக்கப்படவில்லை.

"மெக்சிகோ நாட்டுக்கு தேவையில்லாமல் யாரும் செல்ல வேண்டாம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பொது இடங்களிலும், பொதுமக்கள் வசிப்பிடங்களிலும் திரியும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பன்றிகளுக்கு இந்நோய் வந்ததில்லை. மேலும் மேலை நாடுகளைப் போல இங்கு பன்றி வளர்ப்பு ஒரு மிகப்பெரிய தொழிலாக இல்லை. இதனால் விலங்குகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம்., அரசு நிறுவனம், பன்றிகளுக்கான தடுப்பூசியை தேவையின்மை கருதி உற்பத்தி செய்யவில்லை.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

4. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.

5. கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Friday, May 1, 2009

இட்லிவடைக்கு மரைக்காயர் பதில்



பிரபல வலைப்பதிவாளர் இட்லி வடை தனது பதிவில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தான் வெற்றி பெறுவார் என்று சூசகமாக எழுதியுள்ளார்.

மேலும் ராமேஸ்வரத்தில் ஏதொ ஆட்டோ ஓட்டுநர்கள் பேசியை வைத்து மட்டுமெ ஒரு தொகுதியை கணக்கில் வைத்து பேசுவது என்பது முட்டாள் தனம் (அநேகமாக அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ரித்திஷ் திரைப்படங்களின் ஸ்டிக்கர்களை தங்களின் ஆட்டோகளில் ஓட்டி பாதிக்கப் பட்டவர்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் திருநாவுக்கரசருக்கு வேற வேலை ஏதுவும் இல்லாததால் ஊரில் நடக்க கூடிய காது குத்தில் இருந்து, பூப் புனித நீராட்டு விழா என்று அனைத்திலும் கலந்து கொண்டிருக்கலாம்.

இராமநாதபுரம் முஸ்லிம் மக்களும் முக்குலத்தோர் மக்களும் அதிகம் வசிக்கும் மாவட்டம் ஆகும். தலித் மக்களும் பரவலாக உண்டு.


மேலும் பாஜக வேட்பாளரை பற்றி இவ்வளவு அக்கறை கொண்ட இட்லி வடையார். மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் என்பவர் போட்டியிடுவதையே மறந்து விட்டார்.

உண்மையைச் சொல்லப் போனால் இராமநாதபுரத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது என்னைப் பொறுத்த மட்டிலும் மில்லியன் டாலர் கேள்வியே.

தினமலருக்கு ஏன் இந்த அல்ப விளம்பரம்!!



தினமலரின் பொய் பித்தலாட்டம்இன்றைய (01.05.09) தினமலர் இணையதளத்தில் இந்தியாவில் வெளிவரும் இணையதளங்களிலேயே தினமலரின் இணையதளம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்று புளுகியுள்ளது.



உலகளவில் உள்ள இணையதளங்களை ரேங்கினைப் பட்டியலிடும் அலக்ஸா இணையதளத்தில் சென்று பார்வையிட்டாலே தினமலரின் பொய் பித்தலாட்டம் உடனே அம்பலமாகிவிடும்.



தினமலர் இணைதயம் என்ன சொல்லியிருக்க வேண்டும் இணையதளத்தில் தமிழக அளவில் முதலிடம் என்று சொல்லியிருக்க வேண்டும்.


தினமலருக்கு ஏன் இந்த அல்ப விளம்பரம்!!!

Wednesday, April 29, 2009

தூள் கிளப்பும் மது விற்பனை: கொண்டாடும் அரசு! கொதிப்பில் மக்கள்!!


தேர்தல் வேகத்தில் பிரச்சாரம் சில மேடைகளில் அத்துமீறும், வன்முறை எண்ணங்களும் முகாமில் கூத்தாடும். தேர்தலுக்குத் தேர்தல் மனித மாண்பு களுக்கு மரியாதை குறைந்து வருகிறது. தனிநபர் தாக்குதலும், காது கூசவைக்கும் தீய வசன சவால்களும் மேடைக்கு மேடை பிரயோகிக்கப்பட்டு அப்பாவி வாக்காளர் களின் காதுகள் கிழிபடும்.அதற்கெல்லாம் முக்கியக் காரணங்களில் தலையாய இடத்தைப் பிடிப்பது போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பரவலாகிப் போனதுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு இருக்கிறதே அப்பப்பா சொல்­ மாளாது.தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இன்றுவரை தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக விற்பனை 6 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தேர்தல் தேதி நெருங்கி வருவதாலும், பிரச்சாரம் பரபரப்படைந்து வருவதாலும் தேர்தல் களம் சூடுபிடித்து வரும்போதும் மேலும் 30 சதவீதம் வரை டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 287 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக் குத் தேவையான சரக்குகளை சேகரித்து வைக்க தமிழகம் முழுவதும் 41 சரக்ககங் கள் உள்ளன. மதுவில் மயங்கிக் கிடப் பவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் தற்பொழுது ஒன்பது பெரிய நிறுவனங்களிடம் மதுபானங்கள் வாங்கப் படுகின்றன. அரசின் டாஸ்மாக் கடைக ளுக்கு சரக்குகளை சப்ளை செய்ய மேலும் இரண்டு பெரிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுமட்டு மின்றி வெளிநாட்டு மற்றும் இந்தியத் தயாரிப்பு மதுபான வகை மூலம் தினமும் 60 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறதாம்.அதாவது, மாதம் ஒன்றுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலம் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு லாபம் கிடைக் கிறது. அத்தோடு 40 சதவீதம் நேரடி வரி கிடைக்கிறது.தேர்தல் பரபரப்பில் கடமை யாற்றும்(!) அரசியல் ஊழியர் களின் உற்சாக பானத்தினால் இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக 400 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அதிகார மட்டத்தில் ஆவ லோடு எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேர 'கன ஜோர்' வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு குடிமகன்களை நன்றாக கவனிக்கவும் 'ஜில் பீர்' வழங்கவும் விசேஷ கவனம் செலுத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.தேர்தல் காலத்து வன்முறைகளில் பெரும் பங்கு வகிப்பது மதுபானங்களை அதிகமாக அருந்திவிட்டு நிதானமிழப்பது தான். இருப்பினும் மதுபானத்தில் லாபம் கிடைப்பதுதான் தங்களின் ஒரே குறிக் கோள் என இயங்கும் அரசை என்ன வென்று சொல்வது. மதுவென்னும் கொடி தீமையை அறவே ஒழிக்க, மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமே உடனடி தீர்வாகும்.


அபூசாலிஹ்

தயாநிதி மாறனின் (ஊழல்) சாதனைகள்!


தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர்.

அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் ப­லியாயின.

அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதிபர் டாட்டாவையே மிரட்டினார் தயாநிதி என்று செய்திகள் வெளிவந்தன. பின்னாளில் அவர் தாத்தாவையும் (கலைஞரையும்) மிரட்டினார்.

சன் டி.வி., ஜெயல­லிதாவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஜெயா டி.வி.யையும் மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி.யும், சன் நியூஸ் டி.வி.க்கு எதிராக கலைஞர் செய்திகள் டி.வி.யும் உதயமானது. தொடர்ந்து சிரிப்பொ­லி தொடங்கப்பட, அதற்குப் போட்டியாக ஆதித்யா தொடங்கப்பட்டது.

மாறன் குடும்பமும், கலைஞர் குடும்பமும் இனி சேருமா? என்ற ஐயம் எழுந்த வேளையில் அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி மாறன் என்றும் பத்திரிகைச் செய்திகள் வெளியாயின.
பிறகு எப்படி ஒன்று சேர்ந்தார்கள். கலைஞரின் மருமகனும், மாறன் சகோதரர்களின் சித்தப்பாவுமான செல்வம்தான் இதற்கு முயற்சி எடுத்தார் என்று கூறப்பட்டது. உண்மையில் குடும்பத்தை சேர்த்து வைத்தது 'செல்வம்'தான்.

'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்றார் கலைஞர். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்பிய மத்திய அமைச்சர் பெரம்பலூர் ராஜா மீது 'மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3ஏ நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம்) ஊழல்' என்ற குற்றச்சாட்டை சன் டி.வி. குழுமம் முன்வைத்தது. அதில் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றும் ஊடகங்கள் அலறின. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஊழ­ல் தற்போதைய உச்சக்கட்ட எல்லை.

தயாநிதி மாறன் தரப்பி­ருந்து '3ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழ­ன் ஆதாரங்கள் அன்றாடம் ஒவ்வொரு படலமாய் வெளிவர, ஒற்றுமையின் அவசியத்தை கலைஞர், அழகிரி அன்னகோ உணர்ந் தது. அதன்பிறகுதான் கலைஞரின் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை மேற்கொண்டு அம்பலப்படுத்தாமல் சன் டி.வி. அமுக்கியது.

தற்போதைய நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளர் அ. ராசா, ஒரு லட்சம் கோடி ஊழல் செய்ததை அம்பலப்படுத் திய தயாநிதி மாறன், ஊழ­ல் தார்மீக எதிரியா? இல்லை என்கின்ற தயாநிதியின் தடாலடி ஊழல்கள்.

தன் இடத்தில் அமர்ந்து, ஊழ­ல் தன்னை மிஞ்சிவிட்டாரே ராசா என்பதுதான் தயாநிதியின் ஆதங்கம்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது. ஊழலைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்தது சி.பி.ஐ. ரிலையன்ஸ் செய்த ஊழ­ன் மதிப்பு 4,500 கோடி ரூபாய் அரசாங்கத் திற்கு இது பெரிய இழப்பு. 500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் அபராதமாகக் கட்டி தப்பித்துவிட்டது.

ரிலையன்சின் தப்புகளை மறைத்து தப்பவைத்தவர் தயாள(?) குணம் படைத்தவர் தயாநிதி மாறன். ரிலையன்சின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரியபோது, தேவையில்லை என்று அம்பானிகள் மீது அன்பு மழைப் பொழிந்தவரும் தயாநிதி மாறன்தான்.
அண்மையில் தயாநிதி மாறனின் ஊழல்கள் குறித்து ஜெயல­லிதா வெளி யிட்ட அறிக்கையும் பேச்சும் நாட்டையே உலுக்கின.

தயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 323 இணைப்புகளைப் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே ஒரு எக்சேஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டது. உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அனுப்புவதற்காக 'பேசிக் ரேட் அக்ஸஸ்' மற்றும் 'பிரைமரி ரேட் அக்ஸஸ்' ஆகிய வசதிகள் அவ்விணைப்புகளில் இருந்தன. அமைச்சர் என்ற முறையில் அமைக்கப் பட்ட இணைப்பகத்தை அதிகார வரம்பு மீறல் செய்து, சன் டி.வி.யோடு ரகசிய மாக இணைத்து, அரசுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தயாநிதி மாறன் ஏற்படுத்தி யதை சி.பி.ஐ. கண்டுபிடித்ததாக ஜெயல­லிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tuesday, April 28, 2009

ராஜபக்சேவிற்கு விருந்தளித்த மணிசங்கர் அய்யர்

தமிழக மக்களுக்கு துரோகம்: மகள் திருமணத்துக்கு, ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.


ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார். எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும்.


தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள். இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார். பேட்டியின் போது மனித நேய கட்சி நிர்வாகிகள் முகமது இர்பான், முசாவூதீன், முகமது ஜுனபர், அசரப் அலி உள்பட பலர் இருந்தனர்.

பொள்ளாச்சியில் நல்லாட்சி தரப்போவது யார்?


பொள்ளாச்சி தொகுதியை ம.ம.க அறிவித்த போது பல பேருடைய புருவங்கள் உயர்ந்தன. கவுண்டர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்று பரவலாக அறியப்பட்ட பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னால் சுமார் 28 சதவீதம் முஸ்லிம் வாக்கு களை கொண்ட தொகுதியாக உள்ளது. கோவையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கும் உக்கடம், குனியமுத்தூர், செல்வபுரம் போன்ற பகுதிகள் பொள்ளாச்சியில் சேர்க்கப் பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெருகியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி ம.ம.க வேட்பாளர் உமர் அவர்கள் வணிகர், வியாபார ரீதியில் பல்வேறு மக்களுடன் தொடர்பு உள்ளவர். தமுமுக மாநில செயலாளராக தற்போது இருப்பதால் சமுதாய மக்களுக்கும், ஜமாஅத்துகளுக்கும் நன்கு அறிமுகமானவர். இதனால் தொகுதியின் பல்வேறு ஜமாஅத்துக் களின் ஆதரவு பெருவாரியாக ம.ம.க வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.
மேலும், கோவையில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் கிறித்தவர்கள் உமருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தமுமுக வினர் சிறப்பான மனிதநேய சேவை களை தொடர்ந்து செய்து வருகின்ற னர். இதனால் தமுமுகவின் சேவைகளினால் நன்மதிப்பு கொண்ட மக்களின் வாக்குகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் பலம்.
எதிர் அணிகளை பொறுத்தவரை திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் சுகுமாரன், தேமுதிகவின் பாண்டியன் என அனை வருமே கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள். தொகுதியில் உள்ள 40 சதவி கித கவுண்டர் இனமக்களின் வாக்குகளை நம்பியே முக்கிய கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கி உள்ளன. இதில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த கட்சியின் தலைவர் பெஸ்ட் ராம சாமி பொள்ளாச்சியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதனால் கவுண் டர் இன மக்களின் வாக்குகள் சிதறிப் போகும் சூழ்நிலை உள்ளது. மேலும் திமுகவின் வேட்பாளர் சண்முக சுந்தரம் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வர். இதனால் அதிமுகவுக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் கவுண்டர் இன ஓட்டுக் களை பெறுவதில் போட்டி நிலவுகிறது.
ம.ம.கவை பொறுத்தவரை தொகுதியின் தலித் இன மக்களின் ஆதரவும் கிடைத்திருப்பது மற்றறொரு பலம். வால்பாறை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. 10 சதவீதம் உள்ள த­த் மக்களின் ஆதரவும் PUCL, DYF மற்றும் மனித உரிமை மற்றும் NGO அமைப்பு களின் ஆதரவும் மமகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதால் உமர் அவர்கள் வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது. இப்போதைக்கு அதிமுக., ம.ம.க., கொங்குநாடு பேரவை என பொள்ளாச்சி தொகுதியில் கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் ம.ம.க வேட்பாளர் உமர் தொடர்ந்து எதிர் நீச்சல் போட்டு பொள்ளாச்சியை கைப்பற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இராமநாதபுரத்தில் யாருக்கு வெற்றி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி முஸ்லிகள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் ஒன்று. மொத்த வாக்காளர் களில் 20 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய இத்தொகுதிகயில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் ஹஸன் அலி எனும் முஸ்லிம் ஒருவரே சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சலிமுல்லாஹ் கான் தொகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததானம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளுக்கு பின்புலமாக இருந்து முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். சலிமுல்லாஹ்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சார களத்தில் இறங்கி விட்டனர். ராமநாதபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் அணிகளைப் பொறுத்தவரை தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் முக்குலத்தோர் களின் வாக்குகளை நம்பி திமுக சார்பில் நடிகர் ரித்திஷ், அதிமுக சார்பில் சத்திய மூர்த்தியும், பாஜக சார்பில் திருநாவுக்கர சரும் களமிறங்கி உள்ளனர். இதனால் முக்குலதோர்களின் வாக்கு சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.தி.மு.க சார்பில் சிங்கை ஜின்னா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை கடலாடியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். மற்றபடி சமுதாய மக்களிடமோ தொகுதியிலோ பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர்.
திமுக வேட்பாளர் ரித்திஷ் பணபலம் உடையவராக இருந்தாலும் சீட்டு கிடைக்காத விரக்தியிலும், ரித்திஷின் வளர்ச்சியிலும் பொறாமை கொண்ட திமுகவினரே ''உள்குத்து'' வேலைகளில் இறங்கிவிட்டதால் ரித்திஷ் கடும் மன வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் நடைபெற்ற கோஷ்டி மோதல் வழக்கில் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருவதாலும் அவரது இமேஜும் சரிந்துள்ளது. பிரச்சாரமும் தொய்ந்துள்ளது.
அதிமுக சார்பில் சத்திய மூர்த்தி ஒரு பக்கம் பிரச்சார வேகத்தை கூட்டினாலும் ஊழல் கறை படிந்தவர் என்பதால் முக்குலத்து மக்களிடம் கூட அதிருப்தி நிலவுகிறது. மேலும், பா.ஜ.க சார்பில் களமிறங்கியுள்ள திருநாவுக்கரசரும் முக்குலத்தோரையே நம்பி இறங்கியுள்ள தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பங்கு போடப்படுவது தவிர்க்க முடியாது என்றே கருதப் படுகிறது.
மேலும் பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்த­ல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் துரோகிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.
மேலும் முக்குலத்தோர், த­த், முஸ்லிம் என்ற வரிசையில் தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் த­த் மக்கள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல தலித் அமைப்புகள், புதிய தமிழகம் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ் கானுக்கு ஆதரவு கேட்டு களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே மீனவ அமைப்புகளும், கிறித்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது.
தற்போது அதிமுகவின் சத்திய மூர்த்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சலிமுல்லாஹ்கானுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடந்து வருகிறது. எனினும் தன்மானத்தை மீட்டெடுக்க வேண்டும். துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சலிப்பில்லா மல் ஆற்றும் களப்பணியால் வெகுமக்கள் ஆதரவோடு சலிமுல்லாஹ் கான் வெற்றிக் கொடி ஏற்றுவது நிச்சயம்.

தோல்வி பயத்தில் தயாநிதிமாறன்?



மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு கடும் போட்டியாக மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர்அலி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறு கின்றனர். தயாநிதிமாறனின் பிரச்சாரத் திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹைதர் அலியின் பிரச்சாரமும் படு வேகமாக இருக்கிறது. மத்திய சென்னையின் சந்து பொந்துகளிலெல்லாம் ம.ம.க வேட்பாளரின் பிரச்சார வாகனம் நுழைந்து வருகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் செல்ல தயங்கும் குடிசைப் பகுதிகளில் கூட ம.ம.கவினர் பிரச்சாரத்திற்கு சென்று ஒட்டு வேட்டையாடி வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தயாநிதி மாறன் தி.மு.கவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னால் அவருக்கு எதிராக நின்றால் தோல்வியைத்தான் தழுவ வேண்டும். அந்தளவுக்கு பண பலம் உடைய தயாநிதி மாறனை எதிர்ப் பது கடினம் என்று அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தயங்கி நின்றன. அ.தி.மு.க சார்பில் எஸ்.எஸ். சந்திரன் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் ''தேவையில்லாமல் இறக்கி விட்டார்களே'' என்று புலம்பி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஹைதர் அலி  களமிறங்கியவுடன் தயாநிதி மாறன் அதிர்ந்தார் என்றால் முத­ல் சுதாரித்தது அ.தி.மு.க தான்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய முஸ்­ம் சமுதாயத் தின் ஓட்டுக்களை பெற்று ஹைதர் அலி வென்று விடுவாரே என்ற எண்ணத்தில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ். சந்திரன் மாற்றப்பட்டு மேன்சன் உரிமை யாளர் முஹம்மது அலி ஜின்னா நிறுத்தப்பட்டார். இது முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரிக்க தயாநிதி சசிகலா மூலம் செய்த வேலை என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இது ம.ம.கவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகத்தான் அரசியல் நோக்கர்களால் கருதப்படு கிறது.  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வுடன் ஜமாத் சந்திப்பு, முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு, வீதி வீதியாக தேர்தல் பிரச் சாரம் என தமுமுக, மமக தொண்டர் களோடு, ஹைதர் அலி பம்பரமாக சுழன்று வருகிறார். கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

5 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு ஏதும் உருப்படியாக செய்யாதது தயாநிதிக்கு மைனஸ். மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் நாடகமாடி வரும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழ் அமைப்புகளின் பிரச்சாரம், வெகுஜன மக்களை, சிந்தனையாளர் களை தி.மு.கவுக்கு எதிராக சிந்திக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.கவை பொறுத்த வரை திமுகவுக்கு எதிரான வோட்டுக் களை பெறக் கூடிய அளவில் தகுதியான வேட்பாளர் இல்லாதது அ.தி.மு.க தொண்டர்களே யார் இவர் என்று கேட்க கூடிய நிலையும் முஸ்லிம் சமூக மத்தியில் துளியும் அறிமுகம் இல்லாததும் அ.தி.மு.க வேட்பாளரின் மைனஸ், தே.மு.தி.கவும் வேட்பாளரை அறிவித் துள்ளது மிகச் சிறுபான்மை சமுதாயமான மார்வாடி இனத்தை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் தொகுதியில் சற்றும் அறி முகம் இல்லாதவர்.

இவையெல்லாம் ம.ம.க வேட்பாளர் ஹைதர் அலிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மேலும் தொகுதியில் இருக்கும் கிறிஸ்தவ, தலித் மக்களின் ஆதரவு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவு என பரவலாக தொகுதியில் ஆதரவை பெற்று தற்போது மத்திய சென்னையில் தயாநிதியா, ஹைதர் அலியா என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதர வாக சுற்றுப் பயணம் செய்ய இருந்த தயாநிதியை கலைஞரே ''நீ உன் தொகுதிய மட்டும் கவனமாக பார்'' என்று சொன்னதாக தகவல். இதனால் குடும்பத் தோடு தெருத் தெருவாக சுற்றி வருகிறார் தயாநிதி.
ரயில் என்ஜின் சின்னத்தை மக்களி டம் கொண்டு சென்று சேர்த்து விட்டால் ம.ம.க வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றி உறுதிப்பட்டு விடும். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் மத்திய சென்னையில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஹைதர் அலி வெற்றிக் கனியை பறித்தெடுப்பார் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

Monday, April 27, 2009

மயிலாடுதுறை நாடாளுமன்றம் தேர்தல் முன்னேறுகிறார் பேராசிரியர்






தஞ்சை டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மயிலாடுதுறை வன்னியர், த­த், முஸ்­ம் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும். மற்ற இன மக்களும் ஓரளவு செறிவாக இருக்கின்றனர். தொடர்ந்து 2 முறை காங்கிரஸின் மணி சங்கர் அய்யர் வென்ற தொகுதி இது. கடந்த பாராளுமன்ற தேர்த­ல் தான் வெற்றி பெற தமுமுகவே காரணம் என மணி சங்கரே பேட்டியின் போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மயிலாடுதுறையில் ம.ம.க வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்க்கு தொகுதியின் அனைத்து மக்களின் ஆதரவும், உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது. படித்தவர், பொது வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவர். எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்ற இமேஜோடு சிறுபான்மை மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளார். பேராசிரியர். தொகுதி முழுக்க உள்ள ஜமாஅத்துக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பேராசிரியருக்கு அனைத்து ஜமாஅத்துகளும் ஆதரவு அளித்துள்ளன.

 மேலும், தொகுதியில் வலுவான வாக்கு வங்கியாக இருக்கும் த­த்களின் ஆதரவும் பேராசிரியருக்கு உள்ளது. த­த் அமைப்புகள், மீனவர் அமைப்புகள் பேராசிரியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே போல்  கிறிஸ்தவர்களின் ஆதரவும் தமுமுகவின் பணிகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உள்ளதால் பேராசிரியர் களத்தில் முன்னணியில் இருக்கிறார்.

எதிர் அணிகளைப் பொறுத்தவரை, தொகுதியில் இரண்டு முறை எம்.பியாக இருந்தும் மணி சங்கர் அய்யர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் பரவலாக உள்ளது. மேலும் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் மணி சங்கர் அய்யரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மே­ட உதவியால் திரும்பவும் சீட்டைப் பெற்ற அய்யருக்கு காங்கிரஸிலேயே பலத்த எதிர்ப்பு. திமுகவினரை வைத்துதான் காங்கிரஸுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதாம். காங்கிரஸ்க்கு எதிராக தமிழ் ஆதரவு அமைப்புகளும் களமிறங்கி உள்ளன. இவர்கள் அதிமுகவையும் ஆதரிக்காததால் ம.ம.கவுக்கு அந்த ஓட்டுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அ.தி.மு.க வேட்பாளர் ஓ.எஸ். மணியனை பொறுத்தவரை தொகுதிக்கு நன்கு அறிமுகம் என்றாலும் ராஜ்ய சபா எம்.பியாக இருந்தபோதும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதோடு, தொகுதியில் பெருமளவில் வசிக்கும் வன்னியர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்காததால் கோபத்தில் உள்ளனர். அதனால் தேவரினத்தை சேர்ந்தவரான மணியன் பா.ம.க உதவியைத்தான் நாட வேண்டியுள்ளது.

தற்போது மயிலாடுதுறை தேர்தல் களத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுகவுக்கும் தான் பலத்த போட்டி நிலவுகிறது. சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ அமைப்புகள் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பட்டீஸ்வரம் தியாகிகள் சங்கம், மீனவர்கள் சங்கம், ம.ம.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பேராசிரியருக்கு தொகுதியில் வலுவான வாக்கு வங்கிகளான முஸ்­ம்கள், த­த் மக்களும் இணைந்தாலே வெற்றி என்ற சூழ்நிலையில் நடுநிலை வாக்குகளை பெற்று விட்டால் பேராசிரியர் வெற்றி பெறுவது உறுதி. அதற்கான முயற்சியில் 90 சதவீதத்தை பேராசிரியர் அடைந்து விட்டார் என்றே கள நிலவரம் சொல்கிறது.

Sunday, April 26, 2009

நாகூர் ஹனிபா - ஒரு இசை சரித்திரம்


சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் - ஒரு சரித்திரம், ஆகையால் 'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன் செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப் பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்" என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில் என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.

ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக் கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா அறியாமோ?” “நிங்ஙள் அவரை கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள். அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில் வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?” என்ற கேள்வி எழலாம். “அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல், நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப் போன்ற உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன் இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான் வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில் ‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள் மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது. “முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.

ஹனிபாவின் சில பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர் பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள் உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர் உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்

வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே

ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்

இருக்கையில் நமக்கென்ன தயக்கம்

கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை

ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு

மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?

கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”

என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும் கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத் துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல ‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர். ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள் வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ ‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி எத்தனை கட்டை என்ற விவரத்தை காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை” என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார். (‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர் தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த ‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி

ஒரு யாகம் .. .. ..

மூன்று மணி நேரம் –

மேடையில் சுற்றியுள்ள

வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..

இவர் சுருதியும்

கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர் ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால் அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அரசியலும் அல்வாவும்

நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம் A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத் நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ.

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத் இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும் பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து

தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா

தாத்தாவாம் ஈ.வே.ரா”

என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ

தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர் பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு

சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

திராவிட நாட்டின் சேமம் வேண்டி

சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’ கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!

மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”

என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்” என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே

பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே

கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே

கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”

என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு

தங்க நிலவைத் துரத்துகிறார்

அருமை நபியை ஆருயிரை

அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது

பூவை எறிபவர்கள்

இப்போது

பூவின் மீது

கல்லை எறிகிறார்கள்" என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்

கன்மாரி பெய்துவிட்ட

வன்மனத்தார் திருந்துதற்கு

வழிவகுத்த நாயகமே" என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று

கடுமொழி கேட்டு

உள்ளம் துடித்து

உதிரத்தை வடித்து”

என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்

தந்த தழும்பிலே – இமைகள்

தழுவதற்கும் அழுவதற்கும்

கண்ணீர் பொங்குதே..”

என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்

தாஹா இரசூல் நபி நடக்கையிலே

பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்

பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம் “நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்

யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!

தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்

ஈமான் : இறையச்சம்

நன்றி  www.thinnai.com

மன்மோகன் சிங் மீது ஷு வீச்சு


 பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷு வீசிய வாலிபரை போலீசார் அப்புறப்படுத்தினர். லோக்சபா தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் பிரதமர் மீது ஷு வீசினார். அது மேடைக்கு முன்பாகவே சற்று தொலைவில் விழுந்தது. பின்னர் அந்த மர்ம நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். விசாரனையில் அவர் பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. தலைவர்கள் மீது ஷு வீசுவது தொடர் கதையாகிறது.